ஈரோடு மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்களை திருடும் கும்பல்

ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு, சனி, 7 நவம்பர் 2009( 12:29 IST )
ஈரோடு மாவட்டத்தில் புதியதாக காலி சமையல் எரிவாயுகளை திருடும் கும்பலால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமையல் செய்ய பாரத் கேஸ், இன்டன் கேஸ் என சமையல் கேஸ் பயன்படுத்தி வருகின்றனர். நகர் பகுதிகளில் கேஸ் வினியோகஸ்தர்கள் இருசக்கர வாகனங்களில் வீடுதேடி வந்து சமையல் எரிவாயுகளை கொடுத்துவிட்டு காலி சமையல் எரிவாயுக்களை எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள். இதனால் நகர்புற பெண்களுக்கு இந்த சமையல் எரிவாயு குறித்து எவ்வித பிரச்சனையும் இல்லை.
ஆனால் கிராமபுரத்தில் வீடு, வீடாக சென்று சமையல் எரிவாயு வினியோகம் செய்யப்படுவதில்லை. இதற்கு மாற்றாக கேஸ் ஏஜென்ஸிகள் வேன் மூலம் சமையல் எரிவாயுக்களை எடுத்து சென்று கிராம பகுதிகளில் ஒரு இடத்தில் பத்து நபர்களுக்கு அல்லது அப்பகுதியை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு என வினியோகம் செய்வது வழக்கம். ஒவ்வொறு பகுதிக்கும் ஒவ்வொறு நாள் என்று ஒதுக்கி கொள்கின்றனர்.
இதனால் தங்கள் பகுதிக்கு வேன் வரும் நாளான்று சாலையின் ஓரத்தில் அதாவது வேன் நின்று சமையல் எரிவாயுக்களை கொடுக்கும் இடத்தில் தங்கள் காலி சமையல் எரிவாயுக்களை வைத்து விடுவார்கள். காலி சமையல் எரிவாயு இருப்பதை பார்த்து வேன் அங்கு நிறுத்தி அவர்களின் கணக்கு புத்தகத்தை பார்த்து சமையல் எரிவாயு வினியோகம் செய்வது வழக்கம்.
கிராமங்களில் தோட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தங்கள் காலி சமையல் எரிவாயுக்களை சாலையில் வைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் சமையல் எரிவாயுக்களை பார்த்துக்கொள்ளும்படியும் வேன் வரும்போது தாங்கள் வந்து எடுத்து செல்வதாகவும் கூறி வைத்தவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் அவர் வேலையின் காரணமாக இதை மறந்து விடுவார்கள். இதேபோல்தான் பல வருடங்களாக சமையல் எரிவாயு எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு கேஸ் மூலம் இயக்கும் நிலை வந்ததில் இருந்து சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டது. வீட்டிற்கு மானியவிலையில் ரூ.330 க்கு கிடைக்கும் ஒரு சமையல் எரிவாயு வெளியில் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் காலி சமையல் எரிவாயு ஒன்றை கொடுத்துவிட்டுத்தான் கேஸ் நிரம்பிய சமையல் எரிவாயுவை எடுத்து வரமுடியும்.
இதனால் காலி சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் வைத்திருக்கும் கிராம மக்களின் காலி சமையல் எரிவாயு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் கிராம மக்கள் மீண்டும் சமையல் எரிவாயு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் அந்த புகாரின்பேரில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெற்று மீண்டும் அந்த சமையல் எரிவாயுக்குரிய பணத்தை கேஸ் ஏஜென்ஸிடம் செலுத்தி அதன்பின்னரே மீண்டும் சமையல் எரிவாயு பெறவேண்டும். இதனால் கிராமத்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.