வெள்ளத்தடுப்பு பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு
சென்னை, சனி, 7 நவம்பர் 2009( 09:59 IST )
ஆறு, குளம், ஏரிகள் உடைவதை தடுக்க நடவடிக்கை தேவை என்றும், வெள்ளத்தடுப்பு பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் தற்பொழுது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால் மாநிலம் முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தடுத்திட, அரசின் பல துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உயர் மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இது போன்ற காலங்களில் களப்பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய துறைகளான வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகள் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்.
குறிப்பாக, வருவாய்த்துறையின் சார்பில், மழையினால் ஏற்படும் சேத விவரங்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு, தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டங்களில் பிற துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து வித நிலைமையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டும்.
மனித உயிரிழப்பு, கால்நடை இழப்பு மற்றும் இதர சேதங்களை உடனுக்குடன் கண்டறிந்து தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி உடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியிலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆறுகள், ஏரிகள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் போன்ற நீராதாரங்கள் உடைப்பெடுக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவை நிரம்புவதற்கு முன்பாகவே நீரின் அளவு, மழையின் அளவினை கணக்கிட்டு, வெள்ள நீர் வடிவதற்கான உரிய ஏற்பாடுகளை உடனுக்குடன் பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்களும் தாமாக முன்வந்து நீராதாரங்கள் உடைந்து சேதம் ஏற்படுவதை தவிர்த்திட விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அனைத்து துறையினரும் வெள்ள நிவாரணப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதோடு, தொற்று நோய்கள் பரவாத வண்ணம் குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை பராமரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.