சிங்களப் படத்தில் நடிப்பதை சூர்யா கைவிட வேண்டும் - பழ. நெடுமாறன்!
வியாழன், 5 நவம்பர் 2009( 18:31 IST )
தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் சிங்களப் படத்தில் நடிப்பதை நடிகர் சூர்யா கைவிட வேண்டும் என்று பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
இலங்கையில் சிங்கள இயக்குனரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் தமிழ் நடிகர் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தமிழர்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
கலைஞர்கள் நாடு, இனம் ஆகியவற்றைக் கடந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து 3 லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்து கொடுமை செய்யும் சிங்கள இனவெறி தாண்டவமாடும் நாட்டில் சிங்களரால் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் தமிழர் ஒருவர் நடிப்பதென்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாடப் புறப்பட்ட இந்தியக் குழுவை மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பே தடுத்து நிறுத்தியது.
எனவே தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் நடிகர் சூர்யா சிங்களப் படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். தமிழ் உணர்வு மிக்க நடிகர் சிவகுமாரின் மகன் என்ற முறையிலும், வளர்ந்துவரும் சிறந்த நடிகர் என்ற வகையில் சூர்யா எனது வேண்டுகோளை ஏற்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.