சத்தியமங்கலம் வனப்பகுதியில ஆண் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு, வியாழன், 5 நவம்பர் 2009( 16:38 IST )
சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் ஆண்யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வனப்பகுதியில் வைக்கப்பட்ட கேமராக்கள் எடுத்துள்ள படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
webdunia photo
WD
ஈரோடு சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி மற்றும் டி.என். பாளையம் வனப்பகுதிகள்.
இந்த வனப்பகுதியில் புலிகள் முதல் சிறு முயல்கள் வரை அனைத்து வகையான வனவிலங்குகளும் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகளை அவ்வப்போது வனத்துறையினர் கணக்கெடுத்து ஒவ்வொரு வகையான வனவிலங்குகள் எத்தனை உள்ளது என்ற கணக்கெடுப்பை வனவிலங்குகளின் எச்சங்கள்,காலடிகள் மற்றும் நேரில் பார்ப்பவைகள் மூலம் கணக்கெடுப்பது வழக்கம்.
இதில் புலி, கழுதை புலி மற்றும் சிறுத்தை போன்ற அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் சரியாக கணக்கெடுப்பது சாத்தியமில்லாததாகும்.
webdunia photo
WD
இந்த அரியவகை மற்றும் முக்கிய விலங்குகளை கண்டுகொள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் வழக்கமாக செல்லும் வழித்தடங்கள் மற்றும் தண்ணீர் குடிக்க வரும் பள்ள பகுதிகளில் தான் இயங்கும் கேமராக்களை வைத்து அந்த வழியாக செல்லும் அனைத்து வகையான விலங்குகளை நேரத்துடன் படம் பிடிக்கும் கேமராக்களை சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம் யோசனைப்படி உலகளவிய வன பாதுகாப்பு சங்கத்தின் சத்தியமங்கலம் வனக்கோட்ட திட்ட அதிகாரி பூமிநாதன் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் பொறுத்தியுள்ளனர்.
இந்த கேமராக்கள் எடுத்துள்ள புகைப்படங்களில் நீண்ட தந்தம் உள்ள ஆண் யானைகள் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் அரிய வனவிலங்காக கருதப்படும் கழுதைபுலியும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது.
இந்த வனப்பகுதியை தற்போது வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றியுள்ள நிலையில் இதுபோன்ற அரியவகை விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம் கூறினார்.