நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 12.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கி விடிய விடிய மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 150 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 113.7 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதற்கிடையே மழை மேலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 12.4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
தஞ்சை, அணைக்கரை ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும், புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, பாறையூர் ஆகிய இடங்களில் 6 செ.மீ மழையும், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 10 செ.மீ மழையும், திருத்துறைப்பூண்டியில் 8 செ.மீ மழையும், குடவாசலில் 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.