முகாம்களில் உள்ளவர்கள் அகதிகளல்ல, தமிழர்கள்: கருணாநிதி
செவ்வாய், 3 நவம்பர் 2009( 20:22 IST )
தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ளவர்கள் அகதிகள் அல்ல, அவர்களும் தமிழர்களே, இம்மக்களுடன் இரத்த உறவுக் கொண்டவர்களே என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள முதல்வர், முகாம்களில் உள்ள ஈழத்து மக்களை அகதிளாக அல்லாமல், தமிழர்களாகவே தமிழக அரசு நடத்தும் என்று கூறியுள்ளார். “அவர்கள் அகதிகள் அல்ல, தமிழர்கள். இம்மாநிலத்தில் வாழும் தமிழர்களோடு இரத்த உறவு கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் இங்கு நிரந்தரமாக வாழ இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அந்தத் தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே, அதுகுறித்து தான் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியதாகவும், அவர்களை பொருளாதார வசதியுடன் இங்கு குடியமர்த்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 115 முகாம்களில் 73,241 பேர் உள்ளதாகவும், இவர்கள் தவிர, தங்களைப் பதிவு செய்துகொண்டு மேலும் 31,802 பேர் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு இவர்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கான முத்துலட்சுமி உதவித் திட்டத்திலிருந்து உதவி வழங்கப்பட்டதாகவும், அதன்படி, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 3,242 ஈழப் பெண்கள் பலனடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறும், அவர்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக தனி நல வாரியம் அமைக்குமாறும் தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.