'தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழை'
சென்னை, செவ்வாய், 3 நவம்பர் 2009( 15:01 IST )
''அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலை அடுத்துள்ள இலங்கை பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிபகுதியில் 3 செ.மீ. மழையும், ஆனைகுடி, அறந்தாங்கி, திருப்பத்தூரில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.