தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை அமைச்சர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அகதிகளிடம் குறைகள், அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தனர்.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபடி தமிழ்நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களை அமைச்சர்கள் இன்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் பற்றி ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 14 அகதிகள் முகாமில் 4,016 பேர் வசிக்கிறார்கள். அடிஅண்ணாமலையில் உள்ள அகதி முகாமில் இன்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் பாபு ஆகியோர் சென்றனர். அப்போது, அகதிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு குறைகளை கேட்டறிந்தார்.
முகாமில் கழிப்பிட வசதி சரியாக இல்லை. 35 வீடுகளுக்கு ஒரு மின்சார சர்வீஸ் உள்ளது. இதனால் அடிக்கடி மின்சார பாதிப்பு ஏற்படுகிறது, முகாமில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என்று அகதிகள் அப்போது கூறினர்.
மேலும் வெளியே செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கையெழுத்து போட சொல்வது தங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு, 5 வீடுகளுக்கு ஒரு மின்சார சர்வீஸ் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் 3 மாதத்தில் தீர்க்கப்படும் என்றும் அகதிகளிடம் கூறினார்.
முகாமில் நிரந்தரமாக தங்க விரும்பும் நபர்கள் மனு எழுதி ஆட்சியரிடம் தருமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் அத்தியேந்தல், துக்காபேட்டை, புதுபாளையம், எலத்தூர், கத்தம்பாடி, தென்பள்ளிபட்டு, சொரத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் அமைச்சர் வேலு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள அகதிகள் முகாமில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த முகாமில் 34 குடும்பங்களை சேர்ந்த 140 பேர் தங்கியுள்ளனர். அவர்களிடம் அமைச்சர் கள் குறைகளை கேட்டறிந்தனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை, செவனூர், ஆனைகுட்டம், அனுப்பங்குளம், கண்டிகாபுரம், மொட்டமலை ஆகிய முகாம்களில் தங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அகதிகளை சந்தித்து குறைகளை கேட்டனர்.
அப்போது அமைச்சர்களிடம், பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும், வாகன ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது முகாமில் உள்ள பழுதான 3 வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி காளமுத்துநகர் பகுதியில் இருக்கும் அகதிகள் முகாமுக்கு சென்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, தமிழக அரசின் திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கேஸ் அடுப்பு, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி போன்றவை தங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பொறியியல், மருத்துவ படிப்பை மேற்கொள்ள தங்களது குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரம்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமையும், மாநகராட்சிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டு அகதிகள் முகாமையும் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற அகதிகள் முகாமில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.