உணவு மானியம் ரூ. 3500 கோடியாக உயர்த்தப்படும்: மு.க. ஸ்டாலின்
சென்னை, செவ்வாய், 3 நவம்பர் 2009( 12:08 IST )
''உணவுத்துறைக்கு இப்போது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மானியத் தொகை ரூ. 2,900 கோடியிலிருந்து, ரூ. 3,500 கோடியாக உயர்த்தப்படும்'' என்று துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2006இல் உணவுத்துறை மூலம் வழங்கப்பட்ட 2.5 லட்சம் டன் அரிசி, இப்போது 3.18 லட்சமாகவும், 6 ஆயிரம் டன் கோதுமை 13 ஆயிரம் டன் ஆகவும், 34 ஆயிரம் டன் சர்க்கரை 70 ஆயிரம் டன் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், உணவுத் துறைக்கு இப்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் மானியத்தொகை ரூ. 2,900 கோடியிலிருந்து, ரூ. 3500 கோடியாக உயர்த்தப்படும்.
2008ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தில், நுகர்வோர் சேவை முறைகளில் நிகழும் பிரச்சனைகளுக்கு, உரிய ஆலோசனைகளைப் பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது நுகர்வோர் சேவையில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாநில நுகர்வோர் தொலை தொடர்பு உதவி மையம் (044 - 28592828) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 30,394 நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் வாடகைக் கட்டிடத்தில் உள்ளன. முதல்கட்டமாக, 251 கடைகளுக்கு ரூ5.78 கோடி செலவில் சொந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.