காட்டுபன்றியை சுட்டுக்கொல்ல விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு, செவ்வாய், 3 நவம்பர் 2009( 11:36 IST )
காட்டுபன்றியால் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய பயிரை அடியோடு அழித்து வருவதால் காட்டு பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி அவற்றை சுட்டுகொல்ல அனுமதி வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர் பகுதிகள் வனப்பகுதியின் அருகில் உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த காட்டு பன்றிகள் அதிகமாக பெருக்கம் அடைந்துள்ளது.
இதன் விளைவாக வனப்பகுதியில் இருந்து இருபது கி.மீ தூரம் வரை இந்த காட்டு பன்றிகள் படையெடுத்து சென்று குச்சிகிழங்கு, தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிரை அடியோடு அழித்து வருகின்றது. காட்டுக்குள் ஊடுருவும் காட்டு பன்றிகள் இரவு காட்டுக்குள்ளேயே தங்கிவிடுகிறது.
பயிர்களுக்கு இரவில் தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் செல்லும்போது இந்த காட்டுபன்றிகள் விவசாயிகளை தாக்கியும் வருகிறது. பயிர்களை அழிக்கும் காட்டுபன்றிகள் வனவிலங்குகள் பட்டியலில் இருப்பதால் இவற்றின் மீது தாக்குதல் நடத்த விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
ஆகவே கஷ்டப்பட்டு காப்பாற்றிய விவசாய பயிர்களை அழிக்கும் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். அவற்றை கொல்ல அரசு அனுமதி அளிக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.