முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தமிழகச் செய்திகள் » மத்திய அரசு கரும்புக்கு அறிவித்துள்ள அவசரச் சட்டத்தை திரும்ப பெற விவசாய சங்கம் வலியுறுத்தல் (Centre urged to revoke order on sugarcane price)
மத்திய அரசு கரும்புக்கு அறிவித்துள்ள அவசரச் சட்டத்தை திரும்ப பெற விவசாய சங்கம் வலியுறுத்தல்
திருச்சி, செவ்வாய், 3 நவம்பர் 2009( 12:43 IST )
மத்திய அரசு கரும்புக்கு அறிவித்துள்ள அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக 9 சத சர்க்கரைச் சத்துள்ள ஒரு டன்னுக்கு ரூ.811.20 அறிவித்ததை உயர்த்தவில்லை. 2009-2010ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு 9.5 சத சர்க்கரைச் சத்துள்ள கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக மத்திய அரசு ரூ.1077.60 அறிவித்தது.
தமிழக அரசு பரிந்துரை விலையாக 9.5 சத சர்க்கரைச் சத்துள்ள கரும்பு டன்னுக்கு ரூ.359.40 அறிவித்தது. 9.5 சத சர்க்கரைச் சத்துள்ள கரும்புக்கு ரூ.1437 -ம், 9.5 சத சர்க்கரைச் சத்துக்கு மேல் கூடுதல் சர்க்கரைச் சத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ.23 -ம், போக்குவரத்து மானியமாக டன்னுக்கு ரூ.90 -ம் சேர்த்து ஒரு டன் கரும்பு விலை ரூ.1550 என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 21.10.2009ஆம் தேதி அத்தியாவசியப் பொருள் சட்டம் 1955ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்தும், 1996ஆம் ஆண்டு கரும்புச் சட்டத்தில் திருத்தம் செய்தும், 22.10.2009ஆம் தேதி மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 508 சர்க்கரை ஆலைகளிலும் 9.5 சத சர்க்கரைச் சத்துள்ள கரும்பு டன்னுக்கு ரூ.1298.40 -ம், சர்க்கரைச் சத்துக்கு மேல் கூடுதலாக கிடைக்கும் கரும்புக்கு, ஒரு சதத்துக்கு ரூ.13.70 -ம் நியமன கட்டுப்படியான விலையாக அறிவித்துள்ளது. தற்போது அறிவித்துள்ள சட்டத்தில், மத்திய அரசு கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக அறிவித்ததுபோல, இனிமேல் அறிவிக்கக்கூடாது.
மாநில அரசு பரிந்துரை விலையை ஏற்று சர்க்கரை ஆலைகள் கொடுத்த கரும்புக்கு கூடுதல் விலை வழங்கக் கூடாது. மத்திய அரசு விலை நிர்ணயிக்கும் நியாயமான, கட்டுப்படியான விலையைவிட, மாநில அரசு கூடுதல் விலையை அறிவித்தால் அந்தந்த மாநில அரசே தங்களது சொந்த நிதியில் வழங்க வேண்டும்.
எனவே, அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டம் நடத்துவது குறித்தும் வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான கரும்பு விவசாயிகள் மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்று ராஜா சிதம்பரம் கூறியுள்ளார்.