சென்னையில் நேற்றிரவு பெய்த மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதி மற்றும் தமிழகம் முழுவதும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இரவு 10 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து விடாமல் பெய்தது. இன்று காலை 8.30 மணி வரை மழை பெய்து கொண்டுதான் இருந்தது.
சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் உள்பகுதிகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள அவர், சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். வரும் நாட்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் ரமணன் கூறினார்.