அரசு உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி பயிற்சி மருத்துவர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து போராட்டத்தை தீவிரபடுத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பயிற்சி மருத்துவர்களுக்கு அரசு உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல் பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆசியாவின் மிகப்பெரிய சென்னை அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 300 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். 2,300 நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் இன்று கோரிக்கையை வலியுறுத்தி மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிலையில் உதவித் தொகையை உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்ட பிறகும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் தீவிரமாகி வருவதை அடுத்து அவர்களுடன் இன்று தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பயிற்சி மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள் சுதிசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் அரசு அறிவித்த புதிய உதவித்தொகையை மருத்துவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். பின்னர் இதுபற்றி அனைத்து பயிற்சி மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்தனர். முடிவில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உதவித்தொகை உயர்த்தியதை ஏற்க முடியாது என்றும் நாங்கள் கேட்டதை விட மிகக்குறைவாக தருவதாக கூறுகிறார்கள் என்றும் அதனால் எங்களுடைய போராட்டம் தொடரும் என கூறிவிட்டோம் என்றும் பயிற்சி மருத்துவர் சிவா கூறினார். |