நவீன வசதிகளைக் கொண்ட சென்னை அரசினர் பொது மருத்துவமனையின் நடமாடும் இரத்த வங்கியை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு இந்த ஆண்டில் 101 இரத்த சேமிப்பு நிலையங்கள் ரூ.4.37 கோடி செலவில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவிர 7 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இரத்த பகுப்பாய்வு மையம் ஏற்படுத்தப்பட்டன. நடப்பு ஆண்டில் எஞ்சிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகள், இரத்த பகுப்பாய்வு மையங்களாக ரூ.1.26 கோடி செலவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற 83 அரசு இரத்த வங்கிகளும், 144 தனியார் இரத்த வங்கிகளும் மற்றும் மைய அரசின் நிலையங்களில் 11 இரத்த வங்கிகள் உள்ளன. இவைகள் தவிர, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மத்திய சிறைச்சாலை இடத்தில் ரூ.400 கோடி செலவில் ஒரு மிகப்பெரிய இரத்த வங்கியும், பகுப்பாய்வு மையமும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் இரத்த தானத்தை ஊக்குவிக்கவும், தன்னார்வ இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்தம் பெறவும், எல்லா வசதிகளையும் கொண்ட நடமாடும் இரத்த வங்கி ரூ.50 லட்சம் செலவில் சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன நடமாடும் இரத்த வங்கி கணினி மயமாக்கப்பட்டுள்ளது. முழுமையாக குளிர்சாதனம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் ஆறு படுக்கைகள் உள்ளன. ஒவ்வொரு ஞாயிறும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையில் மெரீனா கடற்கரையில் இரத்ததான முகாம் நடத்தும்போது இரத்ததான விழிப்புணர்வு பற்றிய படம் எல்.சி.டி. புரஜக்டர் மூலம் காட்டப்படும். முதல் முறையாக இரத்த கொடையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இரத்த கொடையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பிறந்தநாள் வாழ்த்து, அடுத்த இரத்தம் கொடை அளிக்கும் நாள் மற்றும் இரத்த பரிசோதனை அறிக்கையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஒரு நாளைக்கு சுமார் 75 முதல் 150 யூனிட் வரை இரத்தம் சேகரிக்க முடியும். 100 யூனிட் இரத்தம் சேமித்து வைக்க குளிர் சாதன பெட்டிகள் உள்ளன.
இந்த வாகனத்தில் மெல்லிசை வசதியும் ஆறு கொடையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதியும் உள்ளன. இரண்டு 15 கே.வி.ஏ. ஜெனரேட்டர்கள் உள்ளது. 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. வாகனத்தின் உட் புறம் எவர்சில்வர் தகட்டால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதிகளைக் கொண்ட சென்னை அரசினர் பொது மருத்துவ மனையின் நடமாடும் இரத்த வங்கியை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். |