பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கணிசமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் உதவித் தொகையை உயர்த்துமாறு போராட்டம் நடத்தியதாக செய்திகள் சில நாளேடுகளில் வெளிவந்துள்ளன. ஆனால் பயிற்சி மருத்துவர்களின் உதவித் தொகையை உயர்த்துவதற்கான கோரிக்கை ஏற்கனவே அரசுக்கு வந்து, முதலமைச்சர் கருணாநிதி நேற்றே அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் கீழ் மருத்துவ பட்டப்படிப்பு பயிலும் பயிற்சி மாணவர்களுக்கும், மருத்துவ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்த முடிவு செய்து அதன் படி, மருத்துவ பட்டப்படிப்பு பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 4,500லிருந்து ரூ.6000 ஆகவும், அரசு பணிசாரா மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையான ரூ. 8,000, ரூ. 12,000 ஆகவும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ. 8,500லிருந்து ரூ. 13,000 ஆகவும், 3ஆம் ஆண்டு மாணவர் களுக்கு இது ரூ.9000 லிருந்து ரூ. 14,000 ஆகவும் வழங்க முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதே போல சிறப்பு மருத்துவர் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் முதலாண்டில் ரூ.9500லிருந்து, ரூ. 15,000 ஆகவும், 2ஆம் ஆண்டில் ரூ. 10,000லிருந்து ரூ. 16,000 ஆகவும், 3ஆம் ஆண்டில் ரூ. 10,000லிருந்து ரூ. 17,000 ஆகவும், 4, 5 ஆம் ஆண்டுகளில் நரம்பியல் அறுவை மருத்துவ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ. 10,000லிருந்து, 4ஆம் ஆண்டில் ரூ.15,000 ஆகவும், 5ஆம் ஆண்டில் ரூ.16,000 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பட்டப்படிப்பு பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ. 300, பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ. 600 கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு 9 கோடியே 60 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும்.
இந்த உண்மை தெரியாமல் நன்றாக படித்த பயிற்சி மருத்துவர்களே நோயாளிகளை கவனிக்க வேண்டிய தங்கள் பணியை மறந்து, அவசர அவசரமாக போராட்டம் நடத்த முன்வந்தது மிகவும் வருந்தத்தக்கதாகும். அரசின் முயற்சியை இனியாவது உணர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. |