இரயில் போக்குவரத்து விரிவாக்கத்திற்காக தங்களின் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் தராவிட்டால் அமைச்சர் வீடு முன்பு மறியல் போராட்டம் நடத்துவேன் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் கூறினார்.
சென்னை போஜராஜன் நகரில் இரயி்ல்வே இருப்புப் பாதைக்கு அருகில் குடிசை மாற்றுக் குடியிருப்பில் 600 வீடுகள் இடிக்கப்பட்டதாகவும், அதில் வாழ்ந்து வந்தவர்களுக்கு இதுவரை எந்த மாற்று ஏற்பாடும் செய்யவில்லை என்று குற்றம் சாற்றிய டி. சுதர்சனம், “இரயில் பாதை விரிவாக்கத்திற்கு மேலும் 400 வீடுகளை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது 1000 குடும்பங்கள் வாழ வழியின்றி நிற்கும். இவர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் குடிசை மாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன் இல்லம் முன்பு அந்த 1000 குடும்பத்தினருடன் வந்த மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று பேசினார்.
சுதர்சனம் பேச்சினால் அதிர்ச்சியடைந்த அடைந்த அமைச்சர் சுப. தங்கவேலன், பிரச்சனையை உடனடியாக கவனிப்பதாக உறுதியளித்தார்.
ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவரிடமிருந்து வந்த எச்சரிக்கை ஆளும் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது தெரிந்த்து. இது நேற்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக கட்சியின் தலைவர் டி.ஆர். பாலு, கூட்டணிக் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்துப் பேசியதற்கு பதிலடியாக சுதர்சனம் பேச்சு ஆளும் கட்சியினரால் கருதப்படுகிறது. |