அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு 2 கோடி ரூபாய் பரிசு பொருள் வந்தது தொடர்பான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 1992ஆம் அண்டு அவரது பிறந்த நாளின் போது ரூ.2 கோடி பரிசு வந்தது. இதுகுறித்து ஜெயலலிதா மீது சி.பி.ஐ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
பரிசு பணத்துக்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சி.பி.ஐ நீதிமன்றத்தில் செங்கோட்டையன் தாக்கல் செய்த மனுவில், ‘என் மீது வழக்கு தொடர்வதற்கு முன்பு அவைத் தலைவரிடம் அனுமதி பெறவில்லை. அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி முகமது இஸத் அலி, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொட அவைத் தலைவரிடம் அனுமதி அளிக்க தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை சுட்டிக் காட்டி செங்கோட்டையன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். |