'' முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத் கொடுக்க மாட்டோம்'' என்று பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் மீது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க. உறுப்பினர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், ம.தி.மு.க. உறுப்பினர் ஞானதாஸ், விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணைப்பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு பூர்வாங்க முயற்சிகளை தொடங்கியிருப்பதாகவும், இதன் ஆபத்தை உணர்ந்து மத்திய அரசு மூலம் தீர்வு காண தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அங்கு புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை 1979ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அந்த அணை பலகீனமாக இருக்கிறது என்று ஒரு பத்திரிகை மூலம் புரளி கிளப்பப்பட்டது. அதன் பிறகு அணையை பலப்படுத்த எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதும் தொடர்ந்து கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் நானே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைப்படி முல்லைப்பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டது.மத்திய நீரியல் நிபுணர்களும் நமது பொறியாளர்களும் 4 முறை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்தனர். மத்திய நீர்வள ஆணையமும், அணை பலமாக இருக்கிறது என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் அணை பலமாக இருப்பதால் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை சேமிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பேபிடேங்க் சீரமைக்கப்பட்ட பிறகு 152 அடி தண்ணீரை நிறுத்தலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.இதன் பிறகு கேரள அரசு புதிதாக சட்டம் நிறைவேற்றி முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த தடையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தமிழக அரசுக்கு சாதகமான நிலையிலேயே இருக்கிறது. 10.2.09 அன்று தீர்ப்பு வரும் நிலையில் அதற்கான நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றதால் தீர்ப்பு வருவது தாமதமானது.இதற்கிடையே கேரள அரசு புதிய அணையை கட்டப்போவதாக ஒரு புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. கேரள முதலமைச்சரும், அங்குள்ள விவசாயத்துறை அமைச்சரும் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசப் போவதாக செய்தி வந்திருக்கிறது. அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லட்டும். நம்மிடம் தான் நியாயம் உள்ளது.தற்போது உள்ள அணை மிகவும் உறுதியாக இருக்கும் போது அந்த மாநிலத்தில் அரசியலுக்காக புதிய அணை என்ற புதிய பிரச்சனையை கிளப்புகிறார்கள். நமது முதலமைச்சர் அண்டை மாநிலங்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. நட்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அண்டை மாநிலங்களின் உறவுக்கு கை கொடுப்போம். உரிமையை இந்த அரசு விட்டுக் கொடுக்காது.தமிழக மக்களை பாதுகாக்க, தமிழக மக்களின் உரிமைகளைப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். பிரதமரை சந்திக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கூறினார்கள். அனைத்துக் கட்சியினருடன் சென்று சந்திக்கலாம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். அவர் உறுதி தருவாரேயானால் அதை நாம் செய்யத் தயார்.நமது மாநில பிரச்சனையில் நமது பேதத்தை வெளியே காட்டக்கூடாது. இந்த முல்லைப் பெரியாறு பிரச்சனையில் எந்தவித நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் கருணாநிதி எடுத்து வருகிறார். எனவே முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று இந்த பிரச்சனை குறித்து வற்புறுத்துவதற்காக பிரதமரை எப்படி சந்திக்க வேண்டுமோ அந்த முறையில் நாம் சந்திக்கலாம்'' என்று துரைமுருகன் கூறினார். |