பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஓரளவு குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள், தேர்தலை மனதில் கொண்டே குறைக்கப்பட்டன.
பணவீக்கம் பூஜ்ஜியத்திற்கு கீழே இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், குறிப்பாக அரிசி, பருப்பு சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகளை திடீரென்று ஏற்றியிருப்பதன் மூலம் விலைவாசிகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட அரசு வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் மீதான சுமைகளை குறைத்திருக்கலாம்.
தற்போதைய விலைவாசிகளைக் கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலைகளைக் கூட்டுவதன் மூலம் மேலும் விலைவாசிகள் உயரும் என்பதையும் கருத்தில் கொண்டு அதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் உணர்ந்து, அரசு பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்திருப்பதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். |