தேர்தலில் நோட்டைக் கொடுத்து ஓட்டை வாங்கி ஜெயித்தாகி விட்டது. இனிமேல் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துதான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்திய அரசைப் பொறுத்த வரையில் உலகச் சந்தையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. அரசியல் நிலவரத்திற்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, அதாவது 4.6.2008ல் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பிறகு டிசம்பர் 2008லும், ஜனவரி 2009லும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓரளவுக்கு குறைக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற இருந்தன. இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை போல் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றின் விளைவாக பேருந்து கட்டணங்கள் உயர வாய்ப்பு உண்டு. லாரிகளின் வாடகை கூடுமாதலால் பால், காய்கறி, மளிகை சாமான்கள் போன்ற அன்றாடம் தேவைப்படும் இன்றியமையாத பொருட்களின் விலையும், துணிமணிகள், புத்தகங்கள் போன்ற அவசியப் பொருட்களின் விலைகளும் உயரும். ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டுள்ளது. அது போதாது என்று, இந்திய அரசே விலைவாசியை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளது வேதனைக்குரியதாகும்.
ஏழை, நடுத்தர மக்கள் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் குமுறுகின்ற பொழுது, அன்றாடம் வேலைக்கு போகவும், சுயதொழில் செய்யவும், போக்குவரத்து செலவுகள் அதிகரிக்குமானால் அவர்கள் அதை எப்படி சமாளிக்க முடியும்? குறிப்பாக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகளுக்கு இந்த டீசல் விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக முந்திய இரவிலேயே அவசர அவசரமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது நாடாளுமன்றமுறைக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயகத்தையே கேலிகூத்து ஆக்குவதாகும்.
தேர்தலில் நோட்டைக் கொடுத்து ஓட்டை வாங்கி ஜெயித்தாகி விட்டது. இனிமேல் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். நோட்டை கொடுத்த முதலாளிகளுக்குத் தான் இனிவரும் ஐந்தாண்டுகளில் சலுகைகளை வாரி வழங்க வேண்டும் என்று ஆட்சியினர் கருதுகின்றனர். அந்த ஆரம்ப கட்டத்தின் அரசின் முதல் பரிசுதான் இந்த பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு.
உண்மையிலேயே இந்திய அரசுக்கு சாதாரண மக்கள் மீது அக்கறை இருக்குமானால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |