இராணுவ வாகனம் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குப்பைகளை அகற்றியும், மரக்கன்றுகளை நட்டும் சேவை செய்தனர்.
கடந்த மே மாதம் 2ஆம் தேதி கோவை நீலாம்பூரில் இராணுவ வாகனங்கள் வழிமறித்து தாக்கப்பட்டது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் கிருஷ்ணசாமி, பொன்.சந்திரன், தனலட்சுமி, முருகேசன், ஜெயப்பிரகாஷ், கருணாநிதி, ரவீந்திரன், கேசவன், பாலு, சின்னச்சாமி ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி, கோவையில் உள்ள சமூக சேவை மையங்களில் 6 நாட்கள் தினமும் 3 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கிருஷ்ணசாமி, பொன்.சந்திரன், தனலட்சுமி, முருகேசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர், பீளமேடு காந்திமாநகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் நேற்று தங்கள் சேவையை துவக்கினர். குப்பைகளை அகற்றி, மரக்கன்றுகளை நட்டனர். ஆதரவற்ற குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘காப்பகத்துக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். சமுதாய விழிப்புணர்வு குறும்படங்களை குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்கவுள்ளோம்’ என்றனர்.
கருணாநிதி, ரவீந்திரன், கேசவன் ஆகியோர் பள்ளபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திலும், பாலு, சின்னசாமி பல்லடத்தில் உள்ள சமூக சேவை மையத்திலும் நேற்று சேவையை துவக்கினர். |