பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பிலிருந்த 5 ஆண்டு காலத்தில் சர்வதேச விலை உயர்வை காரணம் காட்டி, 13 முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியது.
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சாதாரண மக்களால் வாங்க இயலாத நிலைக்கு உயர்ந்து விட்டன. பின்னர் 2008ம் ஆண்டு இறுதியில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. அமெரிக்கா மிகவும் பாதிப்படைந்தது.
அதன் தாக்கம் இந்தியாவை பிடித்துக் கொண்டது. வியாபாரம் படுத்து விட்டது. பங்கு சந்தை நொடிந்து போய்விட்டது. ஏற்றுமதி நின்று விட்டது. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இறங்கவில்லை.
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனங்களின் கட்டணம் உயரும். சாலை வழியாக கொண்டு செல்லப்படும் அத்தனை பொருட்களின் விலைகளும் உயரும். இந்த கூடுதல் சுமை சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
இது வாக்களித்த மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஏற்கனவே, பல்வேறு சோதனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க ஏதுவாக இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். |