10ஆம் வகுப்பு, பிளஸ்2 தேர்வு விடைத்தாளை அதிக கவனக்குறைவாக மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்த ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பிளஸ்2, 10ஆம் வகுப்பு விடைத்தாள் எந்த அளவுக்கு மதிப்பீடு செய்துள்ளனர். அதில் உள்ள தவறுகள் என்ன என்பது பற்றிய விவரங்களை அரசு தேர்வுத்துறையிடம் இருந்து பெறப்படும். அதன்பின்னர் விசாரணை நடத்தி தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிக பட்சமாக அவர்கள் தற்காலிய பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் 2010ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்வது பற்றி பெரிய அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தவறுகள் வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பெருமாள்சாமி கூறினார்.
பிளஸ் 2 விடைத்தாள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்தபிறகு உள்ள மார்க் விவரம் :
1,287 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு வணிகவியல் பாடத்தில் 109 மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதாவது அந்த மாணவர் முதலில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 200க்கு 60 மட்டுமே. அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார். அவரது விடைத்தாளை ஆசிரியர் (முதன்மை மதிப்பீட்டாளர்) திருத்தி உள்ளார்.
மதிப்பெண்களை கூட்டி போடும்போது 160 போட்டுள்ளார். பின்னர் அதை எடுத்து எழுதும்போது 60 என்று எழுதி உள்ளார். அதுமட்டுமல்ல அந்த மதிப்பெண்ணை மேலும் ஒரு உயர் அதிகாரி பார்த்து சரி பண்ணவேண்டும். அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. இப்படி 2 பேர் கண்களை எப்படி இந்த மதிப்பெண்கள் மறைத்தன என்பது தெரியவில்லை.
இப்படி 100 மதிப்பெண்கள் விடுபட்டு போய் உள்ளது. மீண்டும் மறுமதிப்பீடு செய்யும்போது மேலும் 9 மதிப்பெண் கிடைத்துள்ளது. மொத்தத்தில் 109 மதிப்பெண் கூடுதலாக கிடைத்து அவரது வணிகவியல் மதிப்பெண் 169. இது தான் இந்த வருடம் பிளஸ்2 மறுமதிப்பீட்டில் அதிகமான வேறுபாடான மதிப்பெண்.
இயற்பியல் தேர்வில் 310 மாணவர்களுக்கு 1 முதல் 27 மதிப்பெண் வரை அதிகரித்துள்ளது. வேதியியலில் 408 பேருக்கு மதிப்பெண் உயர்ந்துள்ளது. உயிரியல் தேர்வில் 199 பேருக்கு ஒரு மதிப்பெண் முதல் 16 மதிப்பெண் வரை அதிகரித்துள்ளது.
கணிதத்தில் 282 பேருக்கு ஒரு மதிப்பெண் முதல் 28 மதிப்பெண் வரை அதிகரித்துள்ளது. வணிகவியலில் 37 பேருக்கு ஒரு மதிப்பெண் முதல் 109 வரை உயர்ந்துள்ளது.
மறு மதிப்பீட்டில் வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 104 மதிப்பெண்ணும், பொருளாதார பாடத்தில் அதிகபட்சமாக 53 மதிப்பெண்ணும், கணிதத்திலும், வேதியியலிலும் அதிகபட்சமாக தலா 40 மதிப்பெண்ணும், இயற்பியலில் 30 மதிப்பெண்ணும் உயர்ந்துள்ளது. அதே போல மறு மதிப்பீட்டில் அதிகபட்சமாக 28 மதிப்பெண் வரை குறைந்துள்ளது.
இப்படி தாறுமாறாக மதிப்பெண் வித்தியாசம் உள்ளதால் இனிமேலாவது ஆசிரியர்கள் கவனத்துடன் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை சரியாக கூட்டி போடவேண்டும் என்பதே பெற்றோரும், கல்வியாளர்களும் எதிர்பார்க்கின்றனர். |