இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பது உண்மை என்றாலும் அதற்காக சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலை குறித்து எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஆனால் முதலமைச்சர் கருணாநிதியோ, இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பது உண்மை என்றாலும் அதற்காக சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சுயநிதி கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை கொடிகட்டிப் பறக்கிறது. இதனை தடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதில் தமிழக அரசு கண் துடைப்பு நாடகம் தான் நடத்தி வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
கட்டாய நன்கொடை, கட்டணக் கொள்ளை போன்றவற்றை தடுப்பதற்கு சிறந்த வழி சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதுதான். சமூகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான, சீரான கல்வியை வழங்குவதுதான் இந்த கல்விமுறை. சமூகநீதியின் முதல் படியும் சமச்சீர் கல்விதான். இதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
வழக்கில் சிக்கிய இருவருக்கு முன்பிணை வழங்க சொல்லி மத்திய அமைச்சர் ஒருவர் நெருக்கடி கொடுத்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் செயல் நீதித்துறையில் அப்பட்டமான குறுக்கீடு, அதிகார துஷ்பிரயோகம். நீதிபதியை தொலைபேசியில் அழைத்து நிர்ப்பந்தப்படுத்திய மத்திய அமைச்சர் யார் என நீதிபதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை. 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பாமல் பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்வி படிப்பவர்களுக்கு 10ஆம் வகுப்பு தேவை. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களை படிப்பிலிருந்து இடையில் நிறுத்தக் கூடாது. 10ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்று ராமதாஸ் கூறினார். |