கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் நடந்த முறைகேடு வழக்கில் விடுதலையான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, செல்வகணபதி, தலைமை செயலர் ஹரிபாஸ்கர், எச்.எம்.பாண்டே உள்பட 10 பேர் மீது 1996ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்பட சிலரை விடுவித்து, தலைமை செயலர் ஹரிபாஸ்கர், எச்.எம். பாண்டே உள்ளிட்ட சிலருக்கு தண்டனை வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஹரி பாஸ்கர், எச்.எம். பாண்டே ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இதே போல் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தமிழக அரசும் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் ஹரிபாஸ்கர், பாண்டே ஆகியோர் தொடர்ந்த அப்பீல் வழக்குகள் நீதிபதி எம். ஜெயபால் முன்னிலையில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தன. ஆனால் ஜெயலலிதா மீது தமிழக அரசு தொடர்ந்த அப்பீல் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
இதையடுத்து நீதிபதி ஜெயபால், ஜெயலலிதா மீதான அப்பீல் வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிடுங்கள். அதன்பின்பு இவ்வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் தேதி வரும் 6ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றார். |