பிளஸ்2 தேர்வு மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்ற ஊத்தங்கரை பள்ளி மாணவன் பாலமுருகனுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், திருப்பத்தூரை சேர்ந்த மாணவர் பாலமுருகன் பிளஸ்2 தேர்வு மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்றுள்ளார். முதலிடத்தில் தற்போது அவர்தான் வந்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்த பரிசுத் தொகையை கொடுத்துவிட்டனர்.
எனவே மறு கூட்டலில் முதல் மாணவனாக தற்போது வந்திருக்கும் பாலமுருகனை முதல் மாணவனாக அறிவித்து மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது போல் பரிசு, ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், லேப்- டாப் போன்றவற்றையும் வழங்க வேண்டும். அவனது மதிப்பெண்ணை ரேங்க் பட்டியலிலும் சேர்க்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என்று வினா எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், மாணவர் பாலமுருகன் 1184 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவர் மறுகூட்டலில் அந்த மதிப்பெண் பெற்றாரா? அல்லது மறு மதிப்பீட்டில் பெற்றாரா? என்பதை பார்க்க வேண்டும்.
அது எப்படி இருந்தாலும் 1184 மதிப்பெண் பெற்ற அந்த மாணவருக்கு கிடைக்க வேண்டிய பரிசுகளை முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி பாலமுருகனுக்கும் அதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். |