இலங்கை தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்காததால் நடக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டி வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த கப்பலை தீவிர சோதனை செய்த இலங்கை அரசு, அதில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. ஆனால் அதில் உள்ள நிவாரணப் பொருட்களை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது.
திருப்பி அனுப்பப்பட்ட அந்த கப்பல் சென்னை கடற்பகுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வணக்காமண் கப்பலை சென்னை துறைமுகத்துக்குள் அனுமதிக்க சென்னை துறைமுகம் அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் மாற்று கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் செஞ்சிலுவை சங்கம் தமிழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. |