சென்னை: தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.தமிழக அரசு அறிவித்துள்ள ஊனமுற்றோர் நலத்திட்டங்களை அமல்படுத்த மறுக்கும் ஊனமுற்றோர் நலத்துறை நிர்வாகத்தைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் கலந்து கொண்டனர். சென்னை கோட்டூரில் செயல்படும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி. சிதம்பரநாதன் உண்ணாநிலை போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி. சிம்மச்சந்திரன், செயலாளர் கே. சீனிவாசன், பொருளாளர் பி. சந்திரகுமார் உள்ளிட்டோரும், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஊனமுற்றோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்டனர்.தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தினர் 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் நடத்திய பேரணியைத் தொடர்ந்து, சங்க நிர்வாகிகளை முதல் அமைச்சர் கருணாநிதி அழைத்து பேசினார். அப்போது 9 அம்ச கோரிக்கைகள் பெறப்பட்டு, 8 கோரிக்கைகள் குறித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.ஆனால், இந்த ஆணைகளை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக அமல்படுத்தவில்லை என்பதை முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இந்த உண்ணாநிலை நோன்பு என்று ஊனமுற்றோர் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் டாக்டர் தீபக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல இடங்களில் ஊனமுற்றோருக்கென கழிவறைகள் கூட இல்லாத அவலநிலை தொடர்வதாகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலேயே உண்ணாநிலை போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.அரசு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தாமல் உள்ள கோரிக்கைகள்:கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலையின்றி வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி பல்வேறு துறைகளில் 9 ஆயிரம் பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். |