நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய பாதுகாப்பு படை மையங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சென்னை, மும்பை, கொல்கட்டா, ஹைதராபாத் ஆகிய 4 இடங்களில் தேசிய பாதுகாப்பு படை மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் முதலாவது மையத்தை அமைச்சர் ப.சிதம்பரம் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படை மையத்தை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று துவக்கி வைத்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து தேசிய பாதுகாப்பு படையின் கொடியை ஏற்றினார். தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை சிதம்பரம் ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம், எல்லா மாநில தலைநகரங்களிலும் என்.எஸ்.ஜி மையங்கள் துவக்கப்படும். என்.எஸ்.ஜி வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நெருக்கடி காலத்தின் போது பெருநகர காவல்துறைக்கு வழங்கப்படும் ஹெலிகாப்டர்களை என்.எஸ்.ஜி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் மாநில காவல்துறையினருக்கும் என்.எஸ்.ஜி. வீரர்கள் பயிற்சியளிப்பார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்தார். |