புகையிலை நிறுவனங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்பட்ட பின்பும், இன்னும் சுகாதார எச்சரிக்கைப்படம் இல்லாமல் புகையிலைப் பொருட்கள் விற்க அனுமதிக்கப்படுவது ஏன் என்று முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கேள்வி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகிலேயே மிக அதிகமாக புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இங்கு நாள்தோறும் சுமார் 2,500 பேர் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர்.புகையிலைப் பொருட்களின் மீது படத்துடன் கூடிய எச்சரிக்கையை வெளியிடுவதன் மூலம் புகையிலையால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும் என உலக நல்வாழ்வு அமைப்பு கூறுகிறது. இதன் மூலம் அரசின் சட்டத்தைச் செயல்படுத்தும் கடமையிலிருந்து மத்திய, மாநில அரசுகள் தவறி இருப்பதுடன், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.31.5.2009 அன்று முதல் படத்துடன் கூடிய எச்சரிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று இறுதியாக 28.11.2008 அன்று நடுவண் நல்வாழ்வுத்துறை அறிவிக்கை வெளியிட்டது. இதன் மூலம் இதனை நடைமுறைப்படுத்த புகையிலை நிறுவனங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இவ்வாறு நீண்ட கால அவகாசம் அளிக்கப்பட்ட பின்பும், இன்னும் சுகாதார எச்சரிக்கைப்படம் இல்லாமல் புகையிலைப் பொருட்கள் விற்க அனுமதிக்கப்படுவது ஏன்?31.5.2009 முதல் சுகாதார எச்சரிக்கை விதி கட்டாயமாக செயல்படுத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு அளித்த வாக்குறுதி என்ன ஆனது? உறுதிமொழியை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் எந்த விதிவிலக்கும் இன்றி, சட்டத்தில் கூறியுள்ளபடி சுகாதார எச்சரிக்கை உடனடியாக கட்டாயமாக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார். |