தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளைத் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் உவகை பொங்கிடக்கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள தமிழ்புத்தாண்டு-பொங்கல் வாழ்த்து செய்தியில், தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டு-பொங்கல் திருநாளாக இந்த ஆண்டு முதல் கொண்டாடிடும் இனிய தமிழ்ச் சமுதாய மக்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச்சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப்பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.இத்திருவிழாவுடன் 1921-ம் ஆண்டின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் கூடி முடிவு செய்து அறிவித்தபடி தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள் எனச் சட்டமியற்றப்பட்டு, இந்த ஆண்டின் பொங்கல் திருநாள் முதன் முதலாகச் தமிழ்புத்தாண்டு- பொங்கல் திருநாளாக மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது. |