தமிழக முதல்வர் கருணாநிதி உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு உடனடியாக அனுப்பி போரை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தில் தமிழர்களை சிங்கள அரசு இனவெறி கொண்டு முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் நோக்கத்தோடு கோரத் தாக்குதலை நடத்தி வருகிறது. கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நம் தமிழினம் சிங்கள இன வெறியர்களால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்தக் கோரி தாய்த் தமிழகத்தில் உள்ள 6 கோடி தமிழர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். நமக்குள் இருக்கும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளையும் மறந்து உண்ணாவிரதம், மறியல் போராட்டம், மனிதச் சங்கிலி அணிவகுப்பு என்று அனைத்து விதமான போராட்டத்திலும் பங்கேற்று சிங்கள அரசுக்கு நமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினோம். ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி தமிழக சட்டமன்றத்திலும் அனைத்துக்கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக மக்களும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தினர்.முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் டெல்லி சென்று டிசம்பர் 4ஆம் தேதி பிரதமரிடம் மனு கொடுத்தனர். மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. |