" ஜெயலலிதாவிடம் போய் மரியாதையையும், முறையையும், நாகரிகத்தையும் எதிர்பார்ப்பது தவறு. இந்தியப் பிரதமராக இருந்தால் என்ன, குடியரசு தலைவராக இருந்தால் என்ன ஜெயலலிதாவிற்கு அவர்கள் எல்லாம் சர்வ சாதாரணம்" என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜெயலலிதா அறிக்கையில் இந்தியப் பிரதமரைப் பற்றி "அமெரிக்காவின் தாசானுதாசர்'' என்றும், "அவருடைய எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை'' என்றும், "கனவு உலகில் வாழும் மனிதர்'' என்றும் மரியாதைக் குறைவாக விமர்சனம் செய்திருப்பது முறைதானா? நாகரிகம்தானா? ஜெயலலிதாவிடம் போய் மரியாதையையும், முறையையும், நாகரிகத்தையும் எதிர்பார்ப்பது தவறு. இந்தியப் பிரதமராக இருந்தால் என்ன, குடியரசு தலைவராக இருந்தால் என்ன ஜெயலலிதாவிற்கு அவர்கள் எல்லாம் சர்வ சாதாரணம். இவர் நினைத்துக் கொண்டால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவத்தினால் கைது செய்ய முடியாவிட்டால், இந்திய ராணுவம் அவர்களுக்கு உதவியாக இலங்கைக்குச் சென்று கைது செய்து தமிழ் நாட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவார். இல்லாவிட்டால் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி கொடுக்கலாமா? என்பார்.இலங்கைப் பிரதமரை இங்கு அழைத்து வந்து, இந்தியப் பிரதமர் கண்டனம் தெரிவித்திட வேண்டும் என்பார். நினைத்தால் இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கருணாநிதி எதுவுமே செய்யவில்லை, அதற்கான ஆதாரம் எதுவுமே இல்லை என்று இந்து நாளிதழுக்குப் பேட்டி கொடுப்பார். பிறகு கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக இருக்கிறார், அவருடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று டெல்லிக்கு காவடி எடுப்பார். சித்தம் போக்கு, சிவன் போக்கு என்பார்களே, அப்படித்தான்!விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நீங்கள் எதையும் செய்யவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?ஜெயலலிதா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கை விடுகிறார். மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவகம் கவனிக்கப்படவில்லை என்றார். செய்தியாளர்களை அழைத்துச் சென்று காட்டப்பட்டது. விளக்கமான பதிலும் தரப்பட்டது. அதற்குப் பிறகு ஜெயலலிதா அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி நியமனம் பற்றி ஊழல் என்றெல்லாம் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் அந்தத் தேர்வு முறையாக நடைபெற்றது என்று விளக்கம் தரப்பட்டது. அதற்குப் பிறகு ஜெயலலிதா காணாமல் போய் விட்டார். அரிசி கடத்தல் பற்றி அமைச்சர் பேசிவிட்டார் என்று ஒரு நாள் அறிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் ஆதாரத்தோடு பதில் கொடுத்த பிறகு அம்மையார் "அம்போ'' வென்று அந்தப் பிரச்சினையையும் அத்தோடு விட்டுவிட்டார்.கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர்களை தூண்டி விட்டு, நீங்கள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையிலேதான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கழக அரசு எதையும் செய்யவில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார். விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கைகள்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதும், மானிய விலையில் ரூ.50க்கு பத்து மளிகைச் சாமான்கள் கொடுப்பதும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் போன்றவற்றை வழங்குவதும் என்பதைப் புரிந்து கொள்வது அம்மையாருக்கு கஷ்டம்தான். |
| தேடல் தொடர்பான தகவல்கள் |
|