கடந்த இரண்டாண்டு காலமாக அறிவிப்புகள் செய்து பல கட்டங்களில் தொடர்ந்து பேச்சு நடத்தி, ஒவ்வொன்றுக்கும் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற டெண்டர் முறைகளைப் பின்பற்றி அதன்பிறகுதான் இறுதி செய்யப்படுகிறது. இந்த இரண்டு மண்டலங்களும் கூட அந்த முறையிலேதான் அளிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சிறப்புப் பொருளாதார மண்டத்திற்கான டெண்டர் விளம்பரம் 5-3-2007 அன்று பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு - 14-5-2007 டெண்டர் பெறுவதற்கான இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு - மொத்தம் எட்டு நிறுவனங்கள் டெண்டர் கோரி - அதிலே முழுத்தகுதியும் பெற்று அரசுக்குச் சொந்தமான நிலத்திற்கு அதிக விலை கொடுக்க முன்வந்த டி.எல்.எப். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
அதைப் போலவே 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான டெண்டர் விளம்பரம் 14-5-2007 அன்று பத்திரிகைகளிலே வெளியிடப்பட்டு - 6-7-2007 டெண்டர் பெறுவதற்கான இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு -மொத்தம் ஏழு நிறுவனங்கள் டெண்டர் தகுதி பெற்று -இறுதியாக டாட்டா ரியலிட்டி நிறுவனம் மட்டுமே அதிக விலை கொடுக்க முன்வந்ததால் அந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்திலே உள்ள சாமானியர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் உண்மையாக உதவி செய்யத்தான் வெளிநாட்டு, வெளிமாநில முதலீடுகளைக் கொண்டு வந்து தமிழகத்திலே தொழில் வளத்தை ஏற்படுத்திட இந்த அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, டாட்டாக்களிடமும், கிஷோர்களிடமும் தனிப்பட்ட முறையிலே எந்தவிதமான ஆதாயமும் பெற வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல.
வெளியிலிருந்து யாருமே இங்கே வரக் கூடாது, தமிழகத்திற்குள் இருப்பவர்கள்தான் தொழிற்சாலையைத் தொடங்கி அவர்களை மட்டும் ஊக்குவிக்க வேண்டுமென்றால், இவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யக் கூடிய அளவிற்கு அத்தனை தொழிலதிபர்கள் தமிழகத்திலே கிடையாது.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டுமென்ற அரசின் தொழிற்கொள்கைக்கு விரோதமாக செயல்படுவதாகவும் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சென்னையைச் சுற்றி மாத்திரமல்ல, கோவையிலும், மதுரையிலும், திருச்சியிலும், சேலத்திலும், திருநெல்வேலியிலும், ஓசூரிலும், வேலூரிலும் மென்பொருள் பூங்காக்களையும் பெரிய தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கே அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற்று, அந்தச் செய்திகள் ஏடுகளில் வந்ததை டாக்டர் ராமதாஸ் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.
வளர்ச்சியைத் திசை திருப்பக் கூடாது!
இந்த அரசின் முயற்சிகளுக்கு எப்படியெல்லாம் தடைக்கற்கள் போடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அரசின் நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டிய டாக்டர் அவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை அறிக்கைகளாக்கி திசை திருப்புவது என்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை விசை ஒடிந்திடும் நிலைமைக்குத் தான் உள்ளாக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறி உள்ளார்.
|