கடந்த ஆட்சியில் 199 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கலைத்திட அறிவிப்பு வழங்கப்பட்டது. அவற்றுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கைகள் எடுத்ததன் பலனக அவற்றில் 197 வங்கிகள் செயல்படத் தொடங்கி அவற்றின் மூலம் 2 ஆண்டுகளில் ரூ.30 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி 2 வங்கிகளையும் புத்துயிரூட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை!
இந்தியா முழுவதும் உரத் தட்டுப்பாடு இருந்த நிலையிலும் தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. கூட்டுறவுத் துறை மூலம் ரூ.213 கோடியே 50 லட்சத்துக்கு உரங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வைப்புத் தொகை முதிர்வடைந்தும் திரும்ப வழங்கவில்லை என்று பலரும் தெரிவித்தனர். முதிர்வடைந்து திருப்பித் தரப்படாத வைப்புத் தொகை நிலுவை 30.6.2006 அன்று ரூ.170 கோடியே 62 லட்சமாக இருந்தது. இந்த அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ரூ.136 கோடியே 84 லட்சம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டன. மேலும் மீதமுள்ள ரூ.33.78 கோடி விரைவில் வழங்கப்படும். இதன்காரணமாக கூட்டுறவு வங்கிகளில் ரூ.14,963 கோடியாக இருந்த டெபாசிட் ரூ.17,377 கோடியாக அதிகரித்துள்ளது.
கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு மின்னணு எடை இயந்திரங்கள் வழங்குவதற்காக அரசு ரூ.11 கோடியே 50 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து கூட்டுறவு ரேஷன் கடைகளும் மின்னணு எடை இயந்திரங்களுடன் செயல்படும்.
கூட்டுறவு வங்கிகளில் முறைகேட்டை தடுக்க நடவடிக்கை!
தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் தவறு செய்தால் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினார்கள். இடமாற்றம் செய்வதைவிட தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 170 பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 137 பேரை கைது செய்துள்ளோம். எதிர்காலத்தில் முறைகேடு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணை சாரா கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது. அபராத வட்டியை தள்ளுபடி செய்திருக்கிறோம். கால அவகாசம் நீட்டிப்பு தருகிறோம்.
நடப்பு ஆண்டில் புதியதாக திருநெல்வேலி, கரூர், நாகப்பட்டினம், வேலூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இந்த ஆண்டு ரூ.4 கோடி மதிப்பில் கட்டிடம் கட்டப்படும்.
26 கூட்டுறவு அச்சகங்கள் ரூ.3 கோடியில் நவீனமயமாக்கப்படும். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்திலும், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியிலும் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும். 500 கூட்டுறவு ரேஷன் கடைகளை தேர்ந்தெடுத்து சிறு பல்பொருள் அங்காடிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வைப்புதாரர்கள் வைப்புத் தொகையினை திரும்ப பெற நிலுவைத் தொகை ரூ.5 கோடி வட்டியில்லா கடனாக அந்த பண்டகசாலைக்கு வழங்கப்படும். பொதுமக்களுக்கு வைப்புத் தொகை முழுவதும் திரும்ப வழங்கப்படும்.
சென்னையில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆகியவை தேசிய தொழில் நுட்பக் கல்வி கழகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு முதல் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கோ.சி.மணி கூறினார்
|