கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்த பிறகு தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழகக் கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் கோ.சி.மணி, "கூட்டுறவுச் சங்கத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கு முடிந்த பின்னர் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மேலும் அவர் கூறியதாவது:
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததையொட்டி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3,304 கோடியே 42 லட்சத்தை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு விடுவித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ள தொகையையும் உறுதி அளித்தபடி விடுவிக்க உள்ளது.
நடப்பு ஆண்டில் ரூ.1,500 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் இதுவரை கடன் பெறாத 30 விழுக்காடு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு லட்சம் விவசாயிகளை 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்களாக உருவாக்கி அதன் மூலம் ரூ.10 கோடி சுழல் நிதியுதவி வழங்கப்படும். கூட்டுறவு அமைப்புகள் மூலம் மட்டும் ரூ.100 கோடி அளவிற்கு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்படும்.
குறுகியகால, நீண்டகால கடன் கட்டமைப்புகள் நலிவுற்ற நிலையில் உள்ளதால் அவற்றைச் சீரமைக்க வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கால மற்றும் நீண்டகால கூட்டுறவு கடன் பெறுவது குறித்து திட்டம் தயாரிக்க தொழில்நுட்ப ஆலோசனை மையம் சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஏற்படுத்தப்படும்.
தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் கணிணிமயம்!
2008-ம் ஆண்டிலேயே அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கிகள் முழுமையாக கணினி மயமாக்கப்படும். இதற்கென மென்பொருளுக்கு ரூ.2 கோடி செலவிடப்படும். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ரூ.35 லட்சம் செலவில் கணினி மயமாக்கப்படும்.
நலிவடைந்த நிலையில் உள்ள 1,192 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை புத்துயிரூட்டுவதற்கு ஒவ்வொரு வங்கிக்கும் ரூ.20 லட்சம் சிறப்பு காசுக் கடன் சலுகை வட்டி வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவற்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட வழிவகுக்கப்பட்டு உள்ளது. 100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பயிர் மருத்துவ மையங்களாக மாற்றி பல்வேறு வகைப்பட்ட பயன்பாட்டு மையங்களாக்கப்படும்.
|