கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடியும் வரை ஒகேனக்கல் பிரச்சனையில் தற்காலிக அமைதி காப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒகேனக்கல்லிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்குவதற்காக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, 1334 கோடி ரூபாய்க்கான அத்திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவியும் பெற்று, முறைப்படி பெற வேண்டிய தடையிலா சான்றுகள் மற்றும் அனுமதிகளையெல்லாம் படிப்படியாகப் பெற்று இரு மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் மக்களின் குடி தண்ணீர் தேவையை நிறைவு செய்ய தொடக்கப் பணிகளை கடந்த 26.2.2008 ஆம் தேதியன்று மேற்கொண்ட பிறகு, அறிவிக்கப்பட்ட கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, அந்த மாநிலத்து பிஜேபி போன்ற சில கட்சிகளும்,
எப்போதுமே தமிழ், தமிழர் நலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் சமூக விரோதிகளும் ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று குரல் எழுப்பி அதையொட்டி வன்முறைச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கியதை நான் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளும், அரசும், இத்திட்டம் நிறைவேறுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று தனிப்பட்ட முறையிலும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தது பயனில்லாமல் போய் கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கும் அளவுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கு, உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற அளவுக்கும் வன்முறைச் சேட்டைகளைத் தொடர தொடங்கியதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் எதிர்ப்பு நிலை தவிர்க்க முடியாததாகி சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டுமென்று நான் பல காலமாகத் தொடர்ந்து கூறி வருகிற வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிறதே என்ற எனது வேதனைக்கு மருந்தாகவும், தமிழகத்தின் தாங்கும் சக்தி தளர்ந்து போய்விடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இங்குள்ள கட்சிகள் பலவும், கட்சித் தலைவர்களும் களமிறங்கியும், குறிப்பாகவும், சிறப்பாகவும் தமிழ்த் திரை உலகத்துக் கலைஞர் பெருமக்கள் அணி திரண்டு அமைதியான முறையில் அற வழியில் ஒரு பிரம்மாண்டமான உண்ணா நோன்பை மேற்கொண்டு அகில இந்தியாவிலும் நமது அரசும் மக்களும் எடுத்துரைக்கும் நியாயத்தை சுட்டிக் காட்டும் வகையில் பல்லாயிரவர் கூடி மெய்ப்பித்துக் காட்டிய தமிழ் உணர்வையும் போற்றுவதுடன் இதயமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
|