2007-08-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ.674.91 கோடி நடைமுறை வருவாய் ஈட்டி 57.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக துறைமுக கழகத் தலைவர் கே.சுரேஷ் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் 2007-08-ம் ஆண்டு சாதனை குறித்து அதன் தலைவர் சுரேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2007-08-ம் நிதியாண்டில் சென்னை துறைமுகம் கடந்த ஆண்டு சாதனையான 53.41 மில்லியன் டன் சரக்குகளை காட்டிலும் 7 சதவீதம் கூடுதலாக கையாண்டு மொத்தம் 57.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதில் அரசின் இலக்கு 55.86 மில்லியன் டன் மட்டுமே.
இதில் ஏற்றுமதி சரக்குகள் 24.31 மில்லியன் டன், இறக்குமதி சரக்குகள் 34.82 டன்னாகும். ஏற்றுமதி சரக்குகளால் கடந்த ஆண்டைவிட 5.67 சதவீதமும் இறக்குமதி சரக்குகளால் 7.78 சதவீத சரக்குகளும் கூடுதலாகியுள்ளது.
இந்த நிதியாண்டில் 12.79 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்கள் கையாளப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 12.94 மில்லியன் டன்னாக இருந்தது.
பெருகி வரும் சரக்கு பெட்டக போக்குவரத்து பாதுகாப்பிற்கு ஈடுகொடுத்திட ஒரு சரக்கு பெட்டக நிரந்தர (ஸ்கேனர்) நுண்கதிர் ஆய்வு படக் கருவியும் மற்றொரு நகரும் நுண்கதிர் ஆய்வு படக் கருவியும் 2008 செப்டம்பரில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தின் கிழக்கு துறை மற்றும் தெற்கு துறை 3 ஆகியவற்றில் ரூ.491.76 கோடி செலவில் இரண்டாவது சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் 2009 ஏப்ரலில் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படத் துவங்கிய பிறகு படிப்படியாக சென்னை துறைமுகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் டி.இ.யு.எஸ் கையாளப்படும்.
|