பெரும்பாலான பொருட்களுக்கு வரி விலக்கும், வரி விதிப்பும் அளித்து, இந்தாண்டு வரி இல்லாத நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.
அரசு சார்பில் நடத்தப்பட்ட வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மதிப்புக்கூட்டு வரி விதிப்பில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வரிவிலக்கு, வரிக்குறைப்பு சலுகைகள் 1.4.2008-லிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள வரிவிலக்கு சலுகைகள்:
காகித உறை, குறிப்பிட்ட விற்றுமுதல் வரை மஞ்சள், மிளகாய், தனியா வகைகள், அதே விற்றுமுதல் நிபந்தனையுடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, தேங்காய் துருவல், தேங்காய்ப் பால், தேங்காய்ப் பால் பொடி, அடைக்கப்பட்ட இளநீர், வெளிமாநிலத்திற்கு விற்கப்படும் வெல்லம், காட்டாமணக்கு விதை, எண்ணெய், இரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவற்றிற்கு வரிவிலக்கு.
பெரும்பாலான தாவர எண்ணெய்களுக்கும், அனைத்து வகையான சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்கும் விற்றுமுதல் நிபந்தனையுடன் வரிவிலக்கு.
சோயா எண்ணெய்க்கு நிபந்தனையுடன் வரிவிலக்கு.
திருமணத்தின் போது பெண்கள் அணியும் தங்கத்திலான தாலிக்கு 8 கிராம் வரை வரிவிலக்கு உள்ளது.
இஸ்லாமிய, கிறித்தவ மதத்தினர் மங்கல நாணாக பயன்படுத்துகின்ற கருகமணி, சிலுவை போன்றவற்றிற்கும், தற்பொழுது நடைமுறையிலுள்ள 8 கிராம் வரை வரிவிலக்கு உள்ளது.
இந்த எடை வரம்பு ஏதுமின்றி முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சித்த மருந்துகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனையுடன் கூடிய வரிவிலக்குப் பொருட்களான சமையல் எண்ணெய், பருப்பு, பயறு வகைகள், மஞ்சள், மிளகாய், தனியா ஆகிய பொருட்களை உணவகங்கள் கொள்முதல் செய்யும்போது, தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் கொள்முதல் வரி செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க, இப்பொருட்களுக்கு கொள்முதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
|