தேச பாதுகாப்புப் படைக்கு போர் விமான உதவி: விமானப் படை ஒப்புதல்
புதன், 25 நவம்பர் 2009( 13:50 IST )
பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அவசர சூழ்நிலையில் தேச பாதுகாப்புப் படையினரை (National Security Guards _ NSG) நிகழ்விடத்திற்கு துரிதமாக கொண்டுச் செல்ல போர் விமானங்களை அளித்து உதவ இந்திய விமானப் படை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, தேச பாதுகாப்புப் படையினரை அவ்விடத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயங்கரவாதிகளின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட நிலை எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுக்க, அவசர நிலை ஏற்படும்போது தேச பாதுகாப்புப் படையினரை உடனடியாக நிகழ்விடத்திற்குக் கொண்டு செல்ல இந்திய போர் விமானங்களைப் பயன்படுத்தி உதவ வேண்டும் என்று தேசப் பாதுகாப்புப் படையின் சார்பாக இந்திய விமானப் படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தேசப் பாதுகாப்புப் படையின் இந்தக் கோரிக்கையை விமானப் படை ஏற்றுள்ளது.
“எந்த விதமான அவசர நிலை ஏற்பட்டாலும் விமானத்தை அளித்து உதவ இந்திய விமானப் படை சம்மதித்துள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களைப் பயன்படுத்துவதுத் தொடர்பாக தேச பாதுகாப்புப் படையினருக்கு விமானப் படை பயிற்சியும் அளிக்கும்” என்று தேசப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குனர் என்.பி.எஸ். அவ்லாக் கூறியுள்ளார்.
“எங்களுடைய தனித்தப் பயன்பாட்டிற்கு ஹெலிகாப்டர்களையும் கேட்டுள்ளோம். அதனை இந்திய விமானப் படையோ அல்லது உள்துறை அமைச்சகத்தின் விமானப் பிரிவோ வைத்திருக்கும்” என்றும் அவ்லாக் கூறியுள்ளார்.