லிபரான் கமிஷன் அறிக்கை மீது டிசம்பர் 1ஆம் தேதி விவாதம்
புதுடெல்லி, புதன், 25 நவம்பர் 2009( 12:28 IST )
பாபர் மசூதி தகர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நீதிபதி லிபரான் அளித்த அறிக்கை மீது வரும் டிசம்பர் 1ஆம் தேதி மக்களவையில் விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்திய நீதிபதி லிபரான், கடந்த ஜூன் 30ஆம் தேதி தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார். ஆனால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், லிபரான் ஆணைய அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 2 நாட்களாக கடும் அமளி ஏற்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று நாடாளுமன்றத்தில் லிபரான் விசாரணை ஆணைய அறிக்கையையும், அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கும் அறிக்கையையும் ஆங்கிலத்தில் தாக்கல் செய்தார். அதன் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை மீது வரும் டிசம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்ற விதி 193இன் கீழ் மக்களவையில் விவாதம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.