பச்சை பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட முக்கிய பருப்பு வகைகளின் விலை ஒரே ஆண்டில் 80 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதென நாடாளுமன்றத்தில் உணவு அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் சரத் பவார், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கிலோ கிராம் துவரம் பருப்பின் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
பச்சைப் பருப்பு 74 விழுக்காடு உயர்ந்து ரூ.82 ஆகியுள்ளது என்றும் தெரிவித்த அமைச்சர் பவார், பருப்பு தேவையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 16 இலட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டது என்றும், அப்படியிருந்தும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.
பருப்பு வகைகள் மட்டுமல்ல, சர்க்கரையின் விலை ஒரு ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.38 ஆக அதிகரித்துள்ளதையும் அமைச்சர் ஒப்புக் கொண்டார்.