ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஒரு தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக புதனன்று 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 150 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 470 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் - ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) ஒரு அணியாகவும், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி. - லோக் ஜனசக்தி - இடதுசாரிகள் இரு அணிகளாகவும் களமிறங்கியுள்ளதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பல கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள முன்னாள் முதல்வர் மதுகோடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்துக் களமிறங்கியுள்ளனர்.
ஊழல், நக்ஸலைட் தாக்குதல், போதிய மேம்பாட்டுப் பணிகள் இல்லாமை போன்ற அம்சங்கள் இந்த தேர்தலில் பல்வேறு தலைவர்களால் ஒருவரை ஒருவர் குற்றம்சாற்றும் வகையில் பிரசாரத்தில் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 9 ஆண்டுகளில் 7-ஆவது அரசு இந்த தேர்தலின் மூலம் நிர்ணயிக்கப்படும்.