மகாராஷ்டிர கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் உதவியதாக ஒரு உதாரணத்தைக் கூட கூற முடியாது என்றும் இவரது பால்ய சிநேகிதர் வினோத் காம்ப்ளிக்குக் கூட ஆதரவு தெரிவித்தது கிடையாது என்றும் சிவசேனா குற்றம்சாற்றியுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''நான் ஒரு மராட்டியன் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆனால் முதலில் நான் ஒரு இந்தியன். பின்னர்தான் மராட்டியன். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மும்பை சொந்தம்'' என்று கூறினார்.
மராட்டியம் மராட்டியருக்கே சொந்தம் என்ற மண்ணின் மைந்தன் கொள்கையில் தீவிரமாக உள்ள சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு, டெண்டுல்கரின் கருத்து எரிச்சலை ஏற்படுத்தியது.
''டெண்டுல்கர் விளையாட்டில்தான் கவனம் செலுத்த வேண்டும். அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறி அரசியலுக்கு வந்து விட்டார். இதுபோன்ற கருத்துக்களால் அவர் மக்களின் மனங்களிலிருந்து ரன் அவுட் ஆகி விடுவார். மும்பை நகருக்காக 105 மராட்டியர்கள் உயிர்த்தியாகம் செய்தபோது, டெண்டுல்கர் பிறந்திருக்கவே மாட்டார்'' என விமர்சித்திருந்தார்.
டெண்டுல்கர் மீதான பால்தாக்கரேயின் விமர்சனத்துக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டெண்டுல்கருக்கு எதிராக சிவசேனா கட்சி மீண்டும் குறைகூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாமனா'வில் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் எழுதியுள்ள கட்டுரையில், ''மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு டெண்டுல்கர் உதவியதாக உதாரணம் எதையும் கூற முடியாது. மற்றவர்களை விடுங்கள். வினோத் காம்ப்ளிக்குக்கூட அவர் ஆதரவு தெரிவித்தது கிடையாது.
ஆனால் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராக சுனில் கவாஸ்கர் இருந்த போது, அணியில் பாதிப் பேர் மும்பையிலிருந்தும், மகாராஷ்டிராவில் இருந்தும்தான் தேர்வு செய்யப்பட்டனர். சுருநாயக், ஜுல்பிகர் பார்க்கர் போன்றோர் டெஸ்ட் போட்டியில் விளையாட அவர் வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார். அந்த விதத்தில் பார்த்தால் கவாஸ்கர்தான் உண்மையான மராட்டியன். கவாஸ்கரை இன்றைக்கும் முன்பு போலவே ஒட்டு மொத்த தேசமும் நேசிக்கிறது.
சச்சின் போன்ற வீரர்கள் பணக்காரர்கள் ஆகியுள்ளனர் என்றால் அதற்கு காரணம் கிரிக்கெட்தான். சச்சினின் சொத்து மதிப்பு 200 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. மேற்கு வங்கத்தை சார்ந்தவர் என்று கங்குலி பெருமைப்படுவது போன்று, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக சச்சின் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று அவர் எழுதியுள்ளார்.