முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வழக்கு: 5 நீதிபதிகள் முன்பு இன்று விசாரணை
புதுடெல்லி, திங்கள், 23 நவம்பர் 2009( 12:18 IST )
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு அதற்கு எதிரான சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியது.
அத்துடன் 100 ஆண்டு கால பழமையான அணை உடைந்து விடும் அபாயம் இருப்பதாக கூறி புதிய அணை கட்டவும் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேரள மாநில அரசு சார்பில் இந்த வழக்கில் அரசியல் சட்ட பிரச்சனை தொடர்பான கேள்விகள் எழுவதால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வழக்கை 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை வழக்கை விசாரிப்பதற்கான 5 நீதிபதிகளின் பெயரை, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த 3 நீதிபதிகளான டி.கே.ஜெயின், முகுந்தன் சர்மா, ஆர்.எம்.லோதா ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களையும் சேர்த்து, கூடுதலாக சுதர்சன் ரெட்டி, தீபக்வர்மா ஆகிய மேலும் இரு நீதிபதிகளும் இந்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ளனர். 5 நீதிபதிகள் முன்னிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.