அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் தாக்கம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பு - சி.ஐ.ஏ தலைவர் லியோன் ஈ பனெட்டா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் இன்று புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பனெட்டா நேற்றிரவு புதுடெல்லி வந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் எம்.கே. நாராயணன் அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் முன் அவருடன் பனெட்டா சுமார் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் குறித்தும், இந்தியா-அமெரிக்கா இடையேயான உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாராயணனுடன் பனெட்டா ஆலோசனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு பரஸ்பர நலன்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
இந்திய உளவு அமைப்பான ரா தலைவர் கே.சி வர்மா, புலனாய்வுப் பிரிவின் தலைவர் ராஜீவ் மாத்தூர் ஆகியோரையும் சி.ஐ.ஏ தலைவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி, தஹாவூர் ரானா ஆகியோரிடம் எஃப்.பி.ஐ விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலையில், சி.ஐ.ஏ தலைவர் இந்தியா வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை ஆகியோரையும் பனெட்டா சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.