அமெரிக்காவுடன் நீடித்த உறவுக்கு முன்னுரிமை - பிரதமர்
சனி, 21 நவம்பர் 2009( 12:35 IST )
சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் நீடித்ததாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்படும் முன் பிரதமர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சர்வதேச பயங்கரவாதம், தட்பவெப்பநிலை மாற்றம், பொருளாதார தேக்கநிலை போன்ற முக்கியப் பிரச்சினைகளை இரு நாடுகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளவும் வெளிப்படையான உறவுகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் விரிவான பேச்சுக்களை பிரதமர் மேற்கொள்ளவிருக்கிறார்.
அமெரிக்காவுடனான இருதரப்பு நல்லுறவுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அந்த உறவுகள் முதிர்ச்சியுடன் கூடியதாக அமையும் என்றும் பிரதமர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
டிரினிடாட் மற்றும் டொபகோவில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இநதியா - அமெரிக்கா இடையேயான உறவானது குறிப்பிடத்தக்க மாற்றத்தை எட்டியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்று 10 மாதங்களாகும் நிலையில், அந்நாட்டிற்கு அரசு விருந்தினராக செல்லும் முதல் வெளிநாட்டு பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.