பணிப்பெண்ணுக்கு கொடுமை: ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி, மனைவி கைது
கொல்கட்டா, சனி, 7 நவம்பர் 2009( 18:19 IST )
வீட்டில் பணிபுரிந்து வந்த 15 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கட்டாவில் ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீபிரகாஷ் மிஸ்ரா. அவரது வீட்டில் 15 வயதான மஞ்சரி நாயக் பணிப்பெண்ணாக உள்ளார். மிஸ்ராவும் அவரது மனைவியும் மஞ்சரிக்கு உணவு கொடுக்காமல் 2 நாட்களாக வீட்டிலேயே அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மிஸ்ராவின் குடியிருப்பில் இருந்து தப்பி வெளியேறிய மஞ்சரிக்கு அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் தஞ்சம் அளித்து, நேற்று காலை அலிப்பூர் காவல்நிலையத்தில் சேர்த்தார்.
பணிப்பெண் மஞ்சரி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபிரகாஷ் மிஸ்ரா அவரது மனைவி நேற்று கைது செய்த காவல்துறையினர் அவர்களை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களுக்கு பிணை வழங்கியதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டனர்.