ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவரின் சடலத்தைக் கண்டதனால் கோபமுற்ற இளைஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
ஸ்ரீநகரின் சராய்பாலா என்ற பகுதியில் வசித்துவந்த மொஹம்மது மக்பூல் கனி (வயது 45) என்பவர் லால் செளக் பகுதியில் இறைச்சி சுட்டு விற்கும் கடை நடத்தி வருகிறார். இவர் சமையலறை வைத்திருந்த இடத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
அவரது சடலத்தை மீட்ட காவல் துறையினர் அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் கூரான ஆயுதத்தை பயன்படுத்தி ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், எனவே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் கூறிய புத்ஷா பகுதி இளைஞர்கள் பலர் கடைகளை அடைக்குமாறுக் கூறி கல் வீச்சில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.