பிரச்சனை தீர்ந்தது... எடியூரப்பா: மாற்றியே தீரவேண்டும்... ரெட்டி சகோதரர்கள்
புதுடெல்லி, சனி, 7 நவம்பர் 2009( 13:44 IST )
கர்நாடகாவில் நிலவிய அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஆனால், எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ரெட்டி சகோதரர்கள் கூறி வருகின்றனர்.
FILE
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக அரசியலில் ஏற்பட்ட பிரச்சனை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டது. இதற்கு உதவிய பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றி. கர்நாடக பாஜக அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்” என்று கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என்பதில் ரெட்டி சகோதரர்கள் தீவிரமாக உள்ளனர். இதன் ஒருகட்டமாக ரெட்டியை ஆதரிக்கும் 55 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியிடம் நேற்று அளித்தனர். இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே ரெட்டி சகோதரர்களுடன் பாஜக மேலிடத் தலைவர்கள் புதுடெல்லியில் நேற்று மீண்டும் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், புதுடெல்லியில் இருக்கும் எடியூரப்பா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், “பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக” செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.
எனினும், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என ரெட்டி சகோதரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி, "எடியூரப்பாவை மாற்றும் பிரச்சனை தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது எப்போது" என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக இன்னும் 2 நாளில் முடிவு கிடைக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.